இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு (PSTA) எதிராகவும், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்கக் கோரியும் கொழும்பில் உள்ள நீதி அமைச்சுக்கு முன்பாகப் பாரிய எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் (NCU) உள்ளிட்ட பல்வேறு சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தின் போது, அரசாங்கத்தின் அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
குறிப்பாக, "மக்கள் முன்னுள்ள அரசு பயங்கரவாத சட்டமூலத்தை மீளப்பெறு", "அடக்குமுறை சட்டங்கள் வேண்டாம்" போன்ற கோரிக்கைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வலியுறுத்தப்பட்டன.
இந்தப் போராட்டத்தின்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பெருந்தோட்ட மக்கள் குழு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அந்தனி ஜேசுதாசன், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதாக உறுதியளித்திருந்தது என்று சுட்டிக்காட்டினார்.
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அரசாங்கம் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், மக்களை அடக்கி ஒடுக்கி ஆள்வதற்காகவும் அதே போன்றதொரு கடுமையான சட்டத்தை மீண்டும் மறைமுகமாகக் கொண்டு வர முயற்சிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என அவர் சாடினார். ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டத்தினால் உரிமைக்காகப் போராடியவர்கள் சிறையில் இருப்பதாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலையில், மீண்டும் இத்தகைய சட்டங்கள் கொண்டு வரப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்கனவே போதுமான குற்றவியல் சட்டங்கள் இருக்கும்போது, இத்தகைய விசேட சட்டங்கள் தேவையற்றவை எனத் தெரிவித்த அவர், புதிய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது அமைதியான முறையில் போராடும் உரிமையைப் பாதிக்கும் என எச்சரித்தார்.
குறிப்பாக, இது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் மலையக மக்களின் வாழ்வியலையும் பாதிக்கும் என்பதால் இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, மலையக மக்களின் பாரம்பரியத் தொடர்பாடல் முறையான 'பறை' அடித்து, அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்குத் தமது கலாசார ரீதியிலான எதிர்ப்பையும் போராட்டக்காரர்கள் பதிவு செய்தனர்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில் நூதனப் போராட்டம் : "மக்களை ஏமாற்றும் செயல்" என அந்தனி ஜேசுதாசன் கண்டனம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space