கல்வி முறையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சீர்திருத்தங்கள் மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கவலை வெளியிட்டுள்ளார்.

ஆறாம் வகுப்புக்கான புதிய பாடப்புத்தகத்தில் பாலியல் கல்வி தொடர்பான சில விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த மோதல் நிலுவையானது மாணவர்களின் மனநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இத்தகைய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர், அரசாங்கம் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் சமூகத்தின் கல்விமான்களுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியிருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இது தொடர்பாக திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்தி;ப்பிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போதைய கல்வி முறையானது வினாக்களையும் விடைகளையும் மனனம் செய்வதாகவே அமைந்துள்ளது. இது மாணவர்களின் புத்திசாலித்தனத்தை வளர்க்காது. புதிய சீர்திருத்தங்கள் மூலம் மாணவர்களுக்கு வினாக்களை வழங்கி, அதற்கான விடைகளை அவர்களாகவே தேடிச் செல்லும் தேடல் முறையிலான கல்வியை வழங்க வேண்டும். ஆசிரியர்கள் அவர்களுக்கு வழிகாட்டிகளாக இருந்து, விடைகளை எங்கே தேடுவது என்று சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர, விடைகளை ஊட்டிவிடக் கூடாது.

தேடல் முறையிலான கல்விக்கு அண்ட்ராய்டு கையடக்கத் தொலைபேசிகள் அல்லது டேப் போன்ற நவீன உபகரணங்கள் அத்தியாவசியமானவை. ஆனால், பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பெற்றோரால் இத்தகைய உபகரணங்களை எவ்வாறு பெற்றுக்கொடுக்க முடியும்? வறுமை காரணமாக கல்வியை இடைநிறுத்தும் மாணவர்கள், இந்த நவீன உபகரணங்கள் இல்லாததால் மேலும் கல்வியிலிருந்து ஒதுங்கும் நிலை ஏற்படும்.


எனவே, இச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் தேவையான உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்குவதற்கான திட்டத்தை அரசாங்கம் வகுக்க வேண்டும். கல்விச் சீர்திருத்தங்களை ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி தங்களுக்கு இடையிலான அரசியல் மோதலாகப் பார்க்கக் கூடாது. அரசாங்கம் இந்த விடயத்தில் அவசரப்படாமல், அனைவரதும் கருத்துக்களைக் கேட்டு பொறுமையுடன் செயற்பட வேண்டும்.

கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் முன்னெடுத்துள்ள இந்த முயற்சி வரவேற்கத்தக்கது, ஆனால் இதில் கவனிக்கப்படாத பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இந்தக் கல்விச் சீர்திருத்தங்கள் மாணவர்களை புத்திசாலிகளாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு அமைய வேண்டும், மாறாக அவர்களை குழப்பத்தில் ஆழ்த்தக் கூடாது என வாசுதேவ நாணயக்கார மேலும் வலியுறுத்தினார்.