பேலியகொடை - மீகஹவத்த பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (18) பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவர் வத்தளை - ஒலியமுல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புறாக்கள் தொடர்பான தகராறில் இந்தக் கொலை நடந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.