மண்முனைப்பற்று காணி விவகாரம் தொடர்பில் நீதி மன்ற நடவடிக்கை எடுக்கும்போது இன அடிப்படையை கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

ஹிஸ்புல்லாஹ் எம்.பி தனது கேள்வியின்போது, மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் காணி சம்பந்தப்பட்ட பிரச்சினையில், அந்த பிரதேச செயலகத்தினர்  தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு வருவதை இந்த சபையில் பல தடவைகள் தெரிவித்திருக்கிறேன்.

குறிப்பாக அங்கிருக்கின்ற அரச காணிகளில் வசிக்கின்ற தமிழ் மக்களுக்கு எந்தவொரு வழக்கும் தொடுக்கப்படவில்லை. ஆனால் அங்கு வாழுகின்ற முஸ்லிம் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதனால் அதுதொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க காணி ஆணையாளர் நாயகத்தின் ஊடாக குழு ஒன்றை நியமிக்குமாறு ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.

அதனை மேற்கொள்வதாகவும் இந்த சபையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால் இதுதொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன என கேட்கிறேன் என்றார்.

அதற்கு காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், இந்த காணி விவகாரம் தொடர்பில் நீதி மன்ற நடவடிக்கை எடுக்கும்போது இன அடிப்படையை கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதுதொடர்பில் இனம் மற்றும் தகுதி பார்க்கப்படாமல் இதற்கு முன்னர் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மக்கள் குழுவுக்கு எதிராக இந்த பிரதேச செயலகத்தினால் தீர்மானங்கள் எடுக்கப்படுவதில்லை.

மாறாக இன அடிப்படையில் அல்லாமல் சட்டவிராேதமான முறையில் யாராவது செயற்பட்டிருந்தால் அவர்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆவணங்களை பார்க்கும்போது தெரிந்துகொள்ளலாம்.

அந்த தகவல் அறிக்கையை தேவை என்றால் பார்த்துக்கொள்ளலாம். அதேநேரம் காணி ஆணைக்குழுவின் அதிகாரிகள் அந்த இடத்துக்கு சென்று தற்போது கள விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணைகள் முடிவடைந்த பின்னர் காணி அமைச்சினால் முறையான பதில் ஒன்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.