மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு வான் பரப்புகள் மூடப்பட்டுள்ளமையால் இலங்கை சுற்றுலாத் துறை கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக இலங்கைக்கு வாரத்துக்கு சுமார் 10 தொடக்கம் 12 மில்லியன் அமெரிக்க டொலர் வரை இழப்பு ஏற்படும் என்று சுற்றுலாப் பிரதி அமைச்சர் ருவண் ரணசிங்க தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் 30 சதவீதமானோர் மத்திய கிழக்கு வான் பரப்புகள் வழியாகவே வருகை தருகின்றனர். தற்போது காணப்படும் பதற்ற நிலைமை காரணமாக வான் பரப்புகள் மூடப்பட்டுள்ளதால், வாரத்துக்கு 10 முதல் 12 மில்லியன் அமெரிக்க டொலர் வரை இழப்பு ஏற்படும்.
ஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் பெரும்பாலும் மத்திய கிழக்கு வழியாகவே பயணம் செய்கின்றனர். இவ்வாறு பயணம் செய்யும் துபாய், கட்டார் மற்றும் அபுதாபி விமான சேவைகள் தடைப்பட்டிருப்பது இந்த வீழ்ச்சிக்கு காரணமாகும்.
மத்திய கிழக்கு நாடுகளின் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் ஐரோப்பிய பயணிகளின் வருகையில் சிக்கல் ஏற்பட்டிருந்தாலும் இந்தியாவில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அத்துடன் சீனா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் சிரமமின்றி வருகை தருகின்றனர்.
மேலும், ஐரோப்பாவுக்கு நேரடி விமான சேவைகளை ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் ஆரம்பித்துள்ளதுடன் எதிஹாட், கட்டார் ஏர்வேஸ் போன்ற பிரதான விமான சேவைகள் இன்னும் தங்களது சேவைகளை மீண்டும் தொடங்கவில்லை.
தொடர்ந்தும், மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களின் நிலைமை குறித்து வெளிநாட்டு அமைச்சகம் உள்ளிட்ட தரப்புகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் 24 மணி நேரமும் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளுக்கு அமைய ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 89,000 பேர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், ஐரோப்பா முழுவதிலும் இருந்து 236,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கு மோதல், இலங்கை சுற்றுலாத்துறைக்கு வாரத்துக்கு 12 மில்லியன் இழப்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space