களுத்துறை மாவட்டம் மத்துகம பிரதேச சபையின் பெண் செயலாளரை தாக்கி காயப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்துகம பிரதேச சபைத் தலைவர் கசுன் முணசிங்கவை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (02)உத்தரவிட்டுள்ளது.

மத்துகம பிரதேச சபைத் தலைவர் தனது அலுவலகத்திற்கு வந்து தன்னுடன் தகராறில் ஈடுபட்டு தன்னை தாக்கி காயப்படுத்தியதாக பெண் செயலாளர் மத்துகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த பெண் செயலாளர் மத்துகம வெத்தேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மத்துகம பிரதேச சபைத் தலைவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.