மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்துவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. தேர்தலுக்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். இருப்பினும் மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போடுவதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (2) நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசியலமைப்பின் பிரகாரம் உரிய காலத்தில் நடத்தப்படவேண்டிய மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் அரச தலைவர்களும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியும் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தரப்பினரும் பொறுப்புக்கூற வேண்டும்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் எமது அரசியல் எழுச்சி மற்றும் செல்வாக்கை கண்டு அச்சமடைந்தே மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் திட்டமிட்ட வகையில் நெருக்கடி ஏற்படுத்தப்பட்டு எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது என்ற சிக்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ராஜபக்ஷர்கள் வெற்றியோ அல்லது தோல்வியோ உரிய காலத்தில் தேர்தலை நடத்தியுள்ளார்கள். இதனை எவராலும் மறுக்க முடியாது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படுத்தோல்வியடைய வேண்டும் என்பதை நன்கு அறிந்தே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாகாண சபைத் தேர்தலை நடத்தினார்.
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். தேர்தலுக்கு நாங்களும் தயாராக இருக்கிறோம். இருப்பினும் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பல்வேறு வழிமுறைகளில் முயற்சிக்கிறது என்றார்.