ஈரான் நிலைமையைப் பொறுத்தவரை, இது நடந்திருக்கக் கூடாத ஒரு போர். யாருக்கும் எந்த நன்மையும் தராத ஒரு போர் என சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்ற 14வது தேசிய மக்கள் காங்கிரஸின் நான்காவது அமர்வின் ஒரு பகுதியாக, சீனாவின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் உறவுகள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மத்திய கிழக்கின் வரலாறு உலகிற்கு மீண்டும் மீண்டும் ஒன்றைச் சொல்கிறது: படைபலத்தைப் பயன்படுத்துவது எதற்கும் தீர்வாகாது மற்றும் ஆயுத மோதல்கள் வெறுப்பை அதிகரிப்பதோடு புதிய நெருக்கடிகளையே உருவாக்கும். நிலைமை மேலும் மோசமடைவதைத் தவிர்க்கவும், இந்த மோதல் மற்ற இடங்களுக்குப் பரவாமல் தடுக்கவும், இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என சீனா மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.