ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அலெக்ஸி நவால்னி (Alexei Navalny), இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் உயிரிழந்தமைக்கு 'தவளை விஷமே' காரணம் என பிரித்தானியா உள்ளிட்ட 05 ஐரோப்பிய நாடுகள் அதிரடி ஆதாரங்களை வெளியிட்டுள்ளன.
மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய பிரிட்டன் வெளிவிவகார செயலர் யவெட் கூப்பர்,
நவால்னியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்ததில் 'எபிபாடிடைன்' எனப்படும் மிக அரிதான நரம்பு விஷம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த நச்சு தென்னமெரிக்காவின் காடுகளில் வாழும் ஒரு வகை விஷத் தவளைகளில் இருந்து எடுக்கப்படுபவை.
இது மார்ஃபினை விட 200 மடங்கு அதிக வீரியம் கொண்டது. இது உடலில் சென்றால் தசைப் பிடிப்பு, பக்கவாதம், சுவாச செயலிழப்பு ஏற்பட்டு மிக விரைவாக மரணம் நிகழும்.
பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"இந்த அரிதான நச்சுத்தன்மை கொண்ட விஷம் ரஷ்யாவின் இயற்கையில் எங்கும் காணப்படுவதில்லை. நவால்னி சிறையில் இருந்தபோது அவருக்கு இந்த விஷத்தைச் செலுத்த ரஷ்ய அரசுக்கு மட்டுமே வாய்ப்பும், நோக்கமும் இருந்தது. எனவே அவரது மரணத்திற்கு கிரெம்ளின் மாளிகையே முழுப் பொறுப்பு."
தமது கணவர் கொல்லப்பட்டதற்கான அறிவியல் பூர்வ ஆதாரம் கிடைத்துள்ளமை தொடர்பில் அலெக்ஸி நவால்னியின் மனைவி யூலியா,
"முதல் நாளிலிருந்தே என் கணவர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். தற்போது அதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. புட்டின் ஒரு கொலைகாரர், அவர் இதற்காகப் பதில் சொல்லியே ஆகவேண்டும்," எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா வழக்கம் போல மறுத்துள்ளது. இது மேற்கத்திய நாடுகளின் திட்டமிடப்பட்ட "தகவல் யுத்தம்" எனவும், தங்கள் நாட்டுப் பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்பவே இத்தகைய பொய்களைப் பரப்புவதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு குற்றம்சாட்டியுள்ளது.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி விஷம் கொடுத்துக் கொலை ; பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பகிரங்கக் குற்றச்சாட்டு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space