இந்தோனேஷியாவில் உள்ள 'அனக் கிரக்கட்டாவ்' எரிமலை கடந்த 05 ஆம் திகதி வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து, அதனுடன் தொடர்புடையது எனக் கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் இரவு நேர எரிமலை வெடிப்பு காணொளி 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய காணொளி என ஏஎப்பி உண்மை சரிபார்ப்பு செய்தி சேவை உறுதிப்படுத்தியுள்ளது.ஜாகார்த்தா விமான நிலையங்கள் மூடப்பட்டு ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்பதாகக் கூறி த்ரட்ஸ், டிக்டொக் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் சீன மொழியிலும் பிற சர்வதேச மொழிகளிலும் இக்காணொளி வைரலாகப் பரவி வருகிறது.பரப்பப்படும் காணொளி, புகழ்பெற்ற ஜேர்மன் எரிமலை படப்பிடிப்புக் கலைஞர் மார்ட்டின் ரீட்ஸ் என்பவரால் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  24 மற்றும் 26 ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் படமாக்கப்பட்டு, 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 06 ஆம் திகதி யூடியூபில் பதிவேற்றப்பட்டதாகும்.'ரக்கட்டா' கடற்கரையிலிருந்து எடுக்கப்பட்ட மூலக் காணொளியின் வேகம் கூட்டப்பட்டு தற்போதைய சம்பவத்துடன் தவறாக இணைக்கப்பட்டுள்ளது.இக்காணொளி கடந்த 2024 ஆம் ஆண்டு  ஜூன் மாதத்தில் பிலிப்பைன்ஸின் 'கான்லாஓன்'  எரிமலை வெடித்த போதும் தவறாகப் பகிரப்பட்டு ஏஎப்பி செய்தி நிறுவனத்தால் பொய் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடைப்பட்ட சுண்டா நீரிணையில் அமைந்துள்ள அனக் கிரக்கட்டாவ் எரிமலை கடந்த 05 ஆம் திகதி அன்று வெடித்தது உண்மையே. இதிலிருந்து வெளியான எரிமலைச் சாம்பல் 150 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்திற்குப் பரவி ஜகர்த்தா வரையிலான பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், வான்வழிப் பயணங்களுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தியது.எனினும், தற்போது இணையத்தில் தீப்பிழம்புகளுடனும் மின்னலுடனும் வைரலாகும் காணொளி 2018 ஆம் ஆண்டுக்குரியது என்பதால் பொதுமக்கள் இவ்வாறான வதந்திகளைப் பகிர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.