மக்கள் விடுதலை முன்னணி கடந்த காலங்களில் செயற்படுத்திய சர்வாதிகாரத்தை தற்போது அதிகாரத்தில் இருந்துக்கொண்டு செயற்படுத்துகிறது. அரசியல் பழிவாங்கல்களுக்காகவே கைதுகள் இடம்பெறுகிறதென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இந்திக அனுருத்த தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் திங்கட்கிழமை (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை. ஜனாதிபதிக்கு எதிராக வாக்குகளே அதிகளவில் காணப்பட்டன. குறைந்தளவான வாக்குகளே கிடைக்கப்பெற்றன.

அரச தலைவர் என்ற அடிப்படையில் அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு நாங்கள் ஜனாதிபதிக்கு இடமளித்தோம். ஆனால் ஜனாதிபதி சர்வாதிகாரமாகவே செயற்படுகிறது.

மக்கள் விடுதலை முன்னணி  அதிகாரத்தில் இல்லாத சந்தர்ப்பத்தில் ஜனநாயகத்துக்கு விரோதமாக சர்வாதிகாரமாகவே செயற்பட்டது. தற்போது ஆட்சிக்கு வந்து அரச அதிகாரத்துடன் சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.