அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தடைசெய்யப்பட்ட அமைப்பு தொடர்பிலும், புலம்பெயர் இலங்கை தமிழர்களின் (டயஸ்போரா) நிதியுதவி தொடர்பாகவும் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து பொலிஸாரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.மேலும் கடந்த தேர்தல்களின் போது புலம்பெயர் இலங்கை தமிழர்கள் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு நிதியுதவியளித்ததாக அவர் கூறிய கருத்துக்களை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பொதுஜன பெரமுனவின் மேடையிலும் அதற்கு வெளியிலும் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகப் பொலிஸாருக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் சட்டத்துக்கு புறம்பாக அல்லது தடைசெய்யப்பட்ட அமைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எமக்கு அறியக்கிடைத்துள்ளது.அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரங்களுக்கு புலம்பெயர் இலங்கை தமிழர்களால் நிதியுதவி வழங்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கின்றோம். பொதுஜன பெரமுன மேடையில் நின்றுகொண்டு இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்தும், அவர்களுக்கிடையிலான தொடர்பு குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது.அர்ச்சுனாவைத் தவிர புதிய நபர்கள் எவரும் அந்த கூட்டத்தில் இணையவில்லை. மக்கள் போராட்டத்துக்கு பிறகு நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் உருவெடுத்துள்ள போதிலும், பழைய அரசியல்வாதிகள் தங்களது பழைய அரசியல் கலாசாரத்தை மாற்றிக்கொள்ளவில்லை. அத்தகைய நிராகரிக்கப்பட்ட கலாசாரத்தையும் தலைவர்களையும் மக்கள் மீண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.தீவிரவாத அமைப்புகளின் மீள்எழுச்சி அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாகப் பரப்பப்படும் வதந்திகள் மூலம் யார் அரசியல் ஆதாயம் அடைய முயற்சிக்கிறார்கள் என்பதையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதையும் மக்கள் நன்கு அறிவார்கள் என்றார்.