ஈரானில் நிலவி வரும் அதிகரித்த பாதுகாப்பு அபாயங்கள்,  போராட்டங்கள் மற்றும் போக்குவரத்து தடைகள் காரணமாக, அங்குள்ள அமெரிக்கப் பிரஜைகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளை மாளிகை மற்றும் ஈரானுக்கான மெய்நிகர் அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமெரிக்க அரசு உதவியை நம்பாமல், தங்களுக்கென தனிப்பட்ட பாதுகாப்பான வெளியேறும் திட்டத்தை உடனடியாக தயார் செய்து, ஈரானை விட்டு வெளியேற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிலிருந்து துருக்கி மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகள் ஊடாக தரைவழியில் வெளியேற முடியும் எனவும், அவ்வாறு பயணிக்க விரும்புவோர் பாதுகாப்பு நிலவரத்தை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தூதரகத்தின் தகவலின்படி, நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்கள், வீதி மறியல்கள், பொது போக்குவரத்து சேவைகளில் இடையூறுகள், இணையம், கையடக்கத்தொலைபேசி மற்றும் ஏனைய தொலைபேசி சேவைகளின் தடை ஆகிய காரணங்களால் பொதுமக்களின் பாதுகாப்பு கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானுக்கு வரும் மற்றும் வெளிச்செல்லும் விமான சேவைகள் பலவற்றை விமான நிறுவனங்கள் குறைத்தோ அல்லது ரத்துச் செய்தோ வருகின்றன. இதனால் நாட்டை விட்டு வெளியேற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு கூடுதல் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பதற்ற நிலைக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தைகள் ஒமான் நேரப்படி காலை 10 மணிக்கு (இலங்கை நேரப்படி இரவு 11.30) ஆரம்பிக்கப்பட உள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நடைபெறவுள்ள இந்த உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர முயற்சிகள் மீண்டும் உயிர்ப்படக்கூடும் என்ற நம்பிக்கையையும், மறுபுறம் பாதுகாப்பு அபாயங்கள் அதிகரித்து வருவதாகும் என்ற எச்சரிக்கையையும் ஒருசேர வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில், “ உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுங்கள். அமெரிக்க அரசின் உதவியை நம்பாமல், தாங்களே பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்ளுங்கள்” என வெள்ளை மாளிகையின்  அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.