ஈரானின் IRGC படைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க இறுதியில் பிரான்ஸ் நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.
இது ஈரானுடனான உறவுகளைத் துண்டித்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாக, பிரான்ஸ் எப்போதும் ஆதரிக்கத் தயங்கிய ஒரு நடவடிக்கையாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்கள் வியாழக்கிழமை பிரஸ்ஸல்ஸில் சந்தித்தனர். ஈரானில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட மற்றும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு பதிலடியாக, புதிய தடைகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கா அவர்கள் ஏற்கனவே சந்திக்கவிருந்தனர்.
ஆனால், புதன்கிழமை முற்பகல் வரை கூட, அமெரிக்காவைப் பின்பற்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் IRGC-யைச் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அந்த கூட்டமைப்பில் உள்ள பெரும்பான்மையினருக்கு ஆதரவளிக்க பிரான்ஸ் தயக்கம் காட்டி வந்தது.
இந்த நிலையில், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் தமது சமூக ஊடகத்தில் பதிவிடுகையில், ஈரான் மக்களின் அமைதியான எழுச்சியின் தாங்க முடியாத ஒடுக்குமுறைக்கு பதிலடி கொடுக்காமல் இருக்க முடியாது.
அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கண்மூடித்தனமான வன்முறைக்கு எதிராக அவர்கள் காட்டிய அசாதாரண துணிச்சல் வீண் போகக்கூடாது. இதனாலையே, IRGC படைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க பிரான்ஸ் ஆதரவளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரெஞ்சு ஜனாதிபதி மாளிகையும் முன்னதாக இந்த முடிவை அறிவித்திருந்தது. ஈரானின் 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஷியா மதகுருமார்களின் ஆளும் அமைப்பைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட IRGC, நாட்டின் பொருளாதாரத்தின் மற்றும் ஆயுதப் படைகளின் பெரும் பகுதிகளைக் கட்டுப்படுத்தி, நாட்டில் பெரும் செல்வாக்கைக் கொண்டுள்ளது.
மேலும், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணுசக்தித் திட்டங்களின் பொறுப்பும் அதன் வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் ஆதரவாக இருப்பதால், IRGC படைகளுக்கு எதிரான இந்த முடிவு வியாழக்கிழமை அரசியல் ரீதியாக அங்கீகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
சில ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் முன்னர் IRGC-யை ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தாலும், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் அதிக எச்சரிக்கையுடன் இந்த விவகாரத்தில் செயல்பட்டுள்ளன.
இது ஈரானுடனான உறவுகளில் முழுமையான முறிவுக்கு வழிவகுக்கும் என்றும், இது தூதரகப் பணிகளைப் பாதிப்பதுடன், ஈரானியச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐரோப்பியக் குடிமக்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளையும் பாதிக்கும் என்றும் அச்சம் தெரிவித்தனர்.மட்டுமின்றி, கடந்த ஆண்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, தெஹ்ரானில் உள்ள தூதரகத்தில் வசித்து வரும் தங்களது இரண்டு குடிமக்களின் நிலை குறித்து பிரான்ஸ் கவலை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானுக்கு எதிராக... ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுக்கு இறுதியில் கட்டுப்பட்ட பிரான்ஸ்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space