கொங்கோ மற்றும் உகண்டாவில் பரவிவரும் எபோலா வைரஸ் தொற்று தொடர்பில் பொதுமக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், குறித்த வைரஸ் பரவலை எதிர்கொள்வதுக்கு தேவையான அணைத்து நடவடிக்கைகளும் முழுமையாக தயார்ப்படத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எபோலா வைரஸ் பரவல் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபணம் எச்சரிக்கை விடுத்துள்ள பின்னணியில், இந்நாட்டு சுகாதாரப் பிரிவினரின் தயார்நிலை குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று பதில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி தலைமையில் நேற்று (19) செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சில் நடைபெற்றது.
உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ள வழிகாட்டல்கள் மற்றும் அதற்கு இணங்க சுகாதாரப் பிரிவினர் இதுவரை எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
தற்போதைய நிலைவரம் குறித்து நாட்டு மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை என்றும், இந்த வைரஸ் தற்போதைக்கு ஆபிரிக்காவின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பரவியுள்ளது என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. எவ்வாறாயினும், எந்தவொரு அவசர நிலைமையையும் எதிர்கொள்ளும் முழுமையான தயார்நிலையில் சுகாதாரப் பிரிவினர் உள்ளதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
நிலைமையைத் தொடர்ந்தும் கண்காணித்து, ஏனைய தரப்பினருடன் இணைந்து தேவையான முன்னெச்சரிக்கை தலையீடுகளை மேற்கொள்ளுமாறு பதில் சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இக்கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, பொதுச் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் எஸ். எம். ஆர்னல்ட் மற்றும் தொற்றுநோய் விஞ்ஞாபனப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் திலங்க ருவன்பத்திரண உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.