மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போரினால் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டு, பெற்றோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. இந்நிலையில், பொதுமக்களின் குடும்பச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் தாஸ்மேனியா மாநில அரசுகள் பொது போக்குவரத்தை முற்றிலும் இலவசமாக வழங்க முன்வந்துள்ளன.

விக்டோரியா மாநில அரசாங்கம் எதிர்வரும் மார்ச் 31 முதல் ஏப்ரல் இறுதி வரை ஒரு மாத காலத்திற்கு அனைத்து ரயில்கள், டிராம்கள் மற்றும் பஸ்களை இலவசமாக வழங்குகிறது.

பயணிகள் தங்களது பயண அட்டைகளைப் பயன்படுத்தத் தேவையில்லை. அனைத்து நுழைவு வாயில்களும் திறந்து விடப்படும். இதன் மூலம் ஒரு சாதாரண பயணி மாதம் சுமார் 220 முதல் 250 டொலர்கள் வரை சேமிக்க முடியும் என மாநில முதல்வர் ஜசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார்.

தாஸ்மேனியா மாநிலத்தில் பஸ்கள் மற்றும் படகு சேவைகள் மார்ச் 30 முதல் ஜூலை 1 ஆம் திகதி வரை இலவசமாக அமுலில் இருக்கும். இதன்மூலம், டாட்ஜஸ் ஃபெரியிலிருந்து ஹோபார்ட்டிற்கு வேலைக்குச் செல்லும் ஒருவர் வாரத்திற்கு 88 டொலர்கள் வரை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க அவுஸ்திரேலிய மத்திய அரசாங்கம் நாளை திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்யும் போது, அதற்கான காப்புறுதியை அரசாங்கம் ஏற்கும்.

தற்போது அவுஸ்திரேலியாவிடம் 39 நாட்களுக்கான ப பெற்றோலும், 30 நாட்களுக்கான டீசலும் கையிருப்பில் உள்ளதாகப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

வாகனங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்து, முடிந்தவரை வீடுகளிலிருந்து வேலை செய்யுமாறும், தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்து வைக்க வேண்டாம் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.