திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரியான உயிரிழந்த ரங்க ராஜபக்ஷவின் மனைவி "தனது கணவரின் மரணம்" குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கவில்லை என நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) நடைபெற்ற மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நீதிமன்றத்துக்கு நான் பொய்யுரைக்கவில்லை. முஜிபுர் ரஹ்மான் தான் பொய்யுரைக்கிறார். திறைசேரியின் முன்னாள் அதிகாரியின் மரணம் தொடர்பில் அவரது மனைவி எந்த பொலிஸ் நிலையத்திலும் இதுவரையில் முறைப்பாடளிக்கவில்லை.
செயலாளர் அசேல என்பவர் பொய்யுரைக்கிறார். இந்த விடயம் தொடர்பான தகவல்களை திரிபுப்படுத்தவே அவர் முயற்சிக்கிறார். ஆகவே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளதாக குறிப்பிடப்படும் ஆவணங்களை சபைக்கு சமர்ப்பிக்குமாறு முஜிபுர் ரஹ்மானுக்கு நான் சவால் விடுக்கிறேன்.
எந்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது என்பதையும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட வேண்டும். இல்லாத ஒரு விடயத்தை இருப்பதாக குறிப்பிடுகிறார்கள். இது முற்றிலும் தவறானது என்று தெரிவித்துள்ளார்.