கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேகடபொல பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பாகங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் கூட்டு விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை விமானப்படை புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், ரித்திகல வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் மற்றும் குருநாகல் வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் இணைந்து 19ஆம் திகதி முன்னெடுத்த சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கைப்பற்றப்பட்ட  வனவிலங்கு பாகங்களை 300,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

3 புள்ளிமான் கொம்புகள் , 1 கலைமான் கொம்பு, 1 சாம்பார் மான் கொம்பு, 1 எல்க் மான் கொம்பு,சிறுத்தை பற்கள் மற்றும் யானைத் தந்தத்தின் ஒரு பகுதி போன்றவை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வனவிலங்கு பாகங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குருநாகல் வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேக நபர், நாளை திங்கட்கிழமை (22) தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.