உலகம் முழுவதும் மிக பெரிய பேரழிவை ஏற்படுத்தும் பெரும் புயல் அல்லது வெள்ளம் ஏற்படும் என சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளி மூலம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திய கானா நாட்டைச் சேர்ந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ‘எபோ நோவா’ என்ற பெயரில் சமூக ஊடகங்களில் அறியப்படும் எவன்ஸ் எஷுன் என்பவர் ஆவார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விசாரணைகளின் போது, சந்தேக நபர் மெடினா பகுதியில் உள்ள ஒரு தனியார் பாடசாலையில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
கிறிஸ்மஸ் காலத்திற்கு முன்னதாக பரவலாக பகிரப்பட்ட இந்த காணொளி, மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் பலர் வேறு நாடுகளுக்கு பயணம் செய்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், குறித்த காணொளி வெறும் சமூக ஊடக உள்ளடக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை என சந்தேகநபர் விளக்கம் அளித்திருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும் பொதுமக்களிடையே ஏற்பட்ட அச்சத்தை கருத்தில் கொண்டு, பொய்யான தகவல் பரப்புதல் மற்றும் பொதுப் பீதி ஏற்படுத்தல் தொடர்பான சட்டங்களை அவர் மீறியுள்ளாரா என்பது குறித்து அநநாட்டு பொலிஸார்
தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதுவரை அவருக்கு எதிராக அதிகாரப்பூர்வ குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.