இரத்தினபுரி காவத்தை நீலகாமம் இல. 1 தோட்டத்தில் தோட்ட தொழிலாளியால் அமைக்கப்பட்ட வீடு ஒன்றை மர்மக் கும்பல் உடைத்து தரைமட்டம் ஆக்கியமைக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

தோட்டங்களில் பாதுகாப்பு கடமைகளுக்கு என பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் என கூறிக்கொண்டு வந்த சில இனந் தெரியாதவர்களே,  இவ்வாறு வீட்டை அடித்து உடைத்துள்ளனர் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் குறித்து காவத்தை தோட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் காவத்தை தோட்ட நிர்வாகத்திற்கு  எதிராக இ.தொ.கா கடும் தொழிற்சங்க நடவடிக்கையில்  ஈடுபடும் எனவும், இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையில்  முறைப்பாடு முன்னெடுக்க இ.தொ.கா வலியுறுத்தும் எனவும் செந்தில் தொண்டமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.