அரச வைத்தியசாலைகளில் தற்போது குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகள் காணப்பட்டாலும், அதிகரித்துவரும் சிகிச்சைக்கான கேள்விகளைப் பூர்த்தி செய்வதற்கு தற்போதுள்ள வசதிகள் போதுமானதாக இல்லையென அவதானிக்கப்பட்டுள்ளது.

அதனால், சிறுநீரக நோயாளிகள் எதிர்கொள்கின்ற சிரமங்களைக் கருத்தில் கொண்டு, குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்கான தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்காக தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற முறை மூலம் பெற்றுக்கொண்டுள்ள அனுபவங்களின் அடிப்படையில், அடையாளங்காணப்பட்டுள்ள அரச வைத்தியசாலைகளில் குருதிக் கூழ்மப்பிரிப்புக்கு அரச – தனியார் பங்குடமை முறையின் கீழ் பொருத்தமான மாதிரியைக் கண்டறிவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு திட்டமிட்டுள்ளது.


இவ் உத்தேச முறையின் கீழ் குருதிக் கூழ்மப்பிரிப்பு இயந்திரம், வடிகட்டி சுத்திகரிப்பு தொகுதி, தேவையான பயன்பாட்டுப் பொருட்கள், தொழிற்பாடு மற்றும் பராமரிப்புக்களை தனியார் பங்காளர்கள் மூலம் முழுமையான நிதியிட்டு முகாமைத்துவம் செய்வதற்கும், முழுமையான சிகிச்சைக் கண்காணிப்பை பேணி அரசு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கும் எதிர்பார்க்கின்றது.

அதற்கமைய, தெரிவு செய்யப்பட்ட அரச வைத்தியசாலைகளில் குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்காக அரச – தனியார் பங்குடமை முறையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.