தம்புள்ளை பகுதியில் கையடக்கத் தொலைபேசியை மின்னேற்றிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வீடொன்றின் அறை தீப்பிடித்து எரிந்ததில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாது,

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவி ஒருவர், தனது அறையில் கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்து விட்டு மாணவியும் அவரது தாயாரும் அயல் வீடு ஒன்றுக்குச் சென்றுள்ளனர்.

இரவு சுமார் 10 மணியளவில் வீடு திரும்பிய போது, வீடு தீப்பற்றி எரிவதை அவர்கள் அவதானித்துள்ளனர். உடனடியாக பொது மக்கள், தம்புள்ளை மாநகர சபையின் தீ அணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இத்தீ விபத்தில் மாணவியின் உடைமைகள், பாடசாலை உபகரணங்கள், பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தும் முற்றாகச் சேதமடைந்துள்ளன. சம்பவ நேரத்தில் வீட்டில் எவரும் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வீட்டில் தீ பரவுவதற்கான வேறு எந்தவித தடயங்களும் காணப்படாத நிலையில், தொலைபேசி சார்ஜ் செய்யப்பட்டிருந்த மின் இணைப்புப் பகுதியில் இருந்து தீ ஏற்பட்டுப் பரவியதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.