கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 192 ஆவது வருடாந்த திருவிழா கடந்த 3 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
அதன்படி, நாளை வெள்ளிக்கிழமை (12) மாலை 6 மணிக்கு ஆராதனையும், இரவு 7 மணிக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் விசேட நவநாள் திருப்பலிகள் கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் மேல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் நடைபெறும்.
நாளை 13 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தமிழிலும், 5 மணிக்கு சிங்களத்திலும் திருத்தல உதவிப் பரிபாலகர் மற்றும் பரிபாலகர்களின் வழிநடத்துதலில் நவநாள் திருப்பலிகள் ஆரம்பமாகும்.
தொடர்ந்து காலை 6 மணிக்கு தமிழில் பிதா ஜோப் மரியா ரத்தினம் வழிநடத்தலிலும், காலை 7 மணிக்கு சிங்களத்தில் மறைமாவட்ட பிரதான பொருளாளர் வழிநடத்தலிலும், காலை 8 மணிக்கு தமிழில் கொழும்பு உயர் மறைமாவட்ட என்டன் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலும், காலை 10 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட மெக்ஸ்வல் சில்வா ஆண்டகை தலைமையிலும், நண்பகல் 12 மணிக்கு ஆங்கிலத்தில் கொழும்பு உயர் மறைமாவட்ட ஜே.டி.அந்தனி ஆண்டகை தலைமையிலும் நவநாள் திருப்பலிகள் நடைபெறும்.
அதனை தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு சுற்றுபிரகாரம் இடம்பெற்று இரவு 8 மணிக்கு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையால் இறுதி ஆசீர்வாதம் வழங்கப்படும்.