கொழும்பு மத்திய பஸ் நிலைய புனரமைப்பு திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் உயர்மட்ட கூட்டமொன்று நேற்று செவ்வாய்கிழமை (3) பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல், செயல்பாட்டுத் திறனை ஊக்குவித்தல், மேலும் பொதுமக்களுக்கும் பணியாளர்களுக்கும் தூய்மையான, பாதுகாப்பான மற்றும் பயணிகளுக்கு உகந்த சூழலை உருவாக்குதல் என்ற நோக்குடன், இலங்கை விமானப்படையினால் இந்த புனரமைப்புத் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தின்போது, திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
புனரமைப்புப் பணிகள் முழுவதும் உயர்தர கட்டுமானத் தரம் பேணப்படவேண்டும் என்றும், அங்கீகரிக்கப்பட்ட கால அட்டவணையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பொறியியல், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தரநிலைகளுக்கு முழுமையாக இணங்க செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தினார்.
முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் இந்த நிலையத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவர், பணிகள் நடைபெறும் காலத்திலும் பயணிகளுக்கு இடையூறு இல்லாத சேவைகள் தொடரப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும், இந்த புனரமைப்பு நீண்டகால நன்மைகளை வழங்கும் வகையில் அணுகல்திறன், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் மொத்த செயற்பாட்டுத் திறன் மேம்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்தை அமுல்படுத்துவோர் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, செயல்பாட்டு சவால்களை விரைவாக தீர்த்து, சிறந்த தர நிர்ணயங்களுக்கு இணைவாக திட்டத்தை உரிய காலத்துக்குள் நிறைவு செய்யவேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
இலங்கை விமானப்படையின் கட்டுமான பொறியியல் பணிப்பாளர் நாயகம், எயார் வைஸ் மார்ஷல் வஜிர சேனாதீர, திட்டத்தின் பணிக்கோலம், இதுவரை எட்டிய முன்னேற்றம், தற்போதைய நிலை மற்றும் அடுத்த கட்டப் பணிகள் குறித்து விரிவான தொழில்நுட்ப விளக்கத்தை வழங்கினார்.
கட்டுமானத் தரநிலைகளை உறுதி செய்வதற்கும், தாமதங்களைத் தடுப்பதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
கொழும்பு மாநகர சபை மேயர் இந்தத் திட்டத்தை பாராட்டி, இது காலத்திற்கு ஏற்றதும் நகரின் போக்குவரத்து உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியுமாகும் என குறிப்பிட்டார்.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பணிகள் நிறைவு செய்யப்பட்டால், பயணிகள் போக்குவரத்தை எளிதாக்கி, செயல்பாட்டு திறனை உயர்த்தி, சிறந்த சேவையை வழங்க முடியும் என அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் 'தூய்மையான இலங்கை' தேசிய திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது. நகர்ப்புற உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் தூய்மை, பொதுமக்கள் வசதி மற்றும் பொது வசதிகளும் அபிவிருத்தி ஆகியவற்றை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.
இதன் ஒரு பகுதியாக, மேம்படுத்தப்பட்ட பயன்பாட்டு வசதிகள், புதுப்பிக்கப்பட்ட கழிவு மேலாண்மை அமைப்புகள், சிறந்த மின்சார வெளிச்ச வசதிகள் மற்றும் காற்றோட்ட வசதிகள், நவீன வடிவமைப்பு அம்சங்கள் ஆகியவை இணைக்கப்படுகின்றன.
புனரமைப்பு நிறைவு பெற்ற பின்னர், கொழும்பு மத்திய பஸ் நிலையத்தின் உட்கட்டமைப்பு குறிப்பிடத்தக்க அளவில் நவீனமயமாகி, பயணிகள் வசதி மற்றும் அணுகல் திறன் மேம்பட்டு, நெரிசல் குறைந்து, நகரில் இயங்கும் பொதுப் போக்குவரத்து சேவைகளின் திறன் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு மத்திய பேருந்து நிலைய புனரமைப்பு திட்ட முன்னேற்றம் குறித்து பாதுகாப்பு அமைச்சில் விசேட கூட்டம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space