கடந்த 30ஆம் திகதி கொஹுவளை - போதியாவத்த பகுதியில் 16 வயது சிறுமியை சுட்டுக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், துப்பாக்கியை வைத்திருந்த நபர், துப்பாக்கியை கொண்டு சென்ற நபர் மற்றும் சந்தேக நபர்களுக்கு தங்குமிடம் வழங்கிய மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிசை பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் நேற்று சனிக்கிழமை (03) தெஹிவளை - களுபோவில பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு கொஹுவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

சந்தேகநபர்கள் தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த 25, 28, 33 மற்றும் 45 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.


இந்த சம்பவம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக நடந்ததாக ஆரம்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 03 ரிவால்வர் ரக துப்பாக்கிகள், 09 மில்லிமீற்றர் தோட்டாக்கள் பத்து, 50 கிராம் ஹெரோயின், 55 கிராம் ஐஸ் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கொஹுவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.