2019-ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அடிப்படையில் தன்னைக் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
இதன்படி, இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22-ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03) திங்கட்கிழமை அறிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இருவரடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இத்தீர்மானம் அறிவிக்கப்பட்டது.
வழக்குடன் தொடர்புடைய எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை எதிர்வரும் ஆகஸ்ட் 31-ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் பொலிஸார் அல்லது குற்றப்புலனாய்வுத் துறையினர் தன்னைக் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ தனது மனுவில் கோரியுள்ளார்.