உடுமுல்ல பகுதியை சேர்ந்த நபர் ஒருவரால் சட்ட விரோதமான முறையில் ஈட்டப்பட்ட பணத்தைக்கொண்டு அவரது மனைவியின் பெயரில் கொள்வனவு செய்த சுமார் 1 கோடியே 80 இலட்சம் ரூபா சொத்துகளை முடக்குவதுக்கு குற்றவரும்படி பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
உடுமுல்ல, படபொல பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக்களை ஈட்டி வருவதாக கிடைத்த முறைப்பாடு ஒன்றுக்கு அமைய, காலி மாவட்ட குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இது தொடர்பான விபரங்கள் காலி நீதிவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காக இந்த விவகாரம் குற்றவரும்படி விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.
குற்றவரும்படி விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்திருந்த விசாரணைகளுக்கமைய, குறித்த சந்தேகநபர் சட்டவிரோதமான முறையில் ஈட்டிய பணத்தைக் கொண்டு, தனது மனைவியின் பெயரில் சொத்துக்களைக் கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது. அதற்கமைய படபொல பகுதியில் 1 கோடி ரூபா பெறுமதியான 4.5 ஏக்கர் காணி, அதே பகுதியில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 54 பேர்ச்ஸ் கறுவாத் தோட்டம், கிதுல்கஹ, உடுமுல்ல பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 3 கோடி ரூபா பெறுமதியான மாடி வீடு உள்ளிட்ட சொத்துகளை கொள்வனவு செய்துள்ளார்.
இந்நிலையில் பணச் சுத்திகரிப்புத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முறைகேடாக ஈட்டப்பட்ட இந்தச் சொத்துக்களை, ஜூன் 17 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 7 நாட்களுக்கு முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.