வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், பாதிக்கப்பட்டோருக்கான நீதியை நிலைநாட்டுவதற்கும் நம்பத்தகுந்த சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவியினால் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
29 குழந்தைகள் உள்ளடங்கலாக வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையையும், அவர்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் அமைதிப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 9 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருப்பதை முன்னிட்டு உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.
2017 ஆம் ஆண்டு பெப்ரவரி 20 ஆம் திகதி இந்தக் கவனயீர்ப்புப் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களால் தொடர் போராட்டங்கள், ஆவணப்படுத்தல் முயற்சிகள் மற்றும் சர்வதேச பொறிமுறைகளுடனான தொடர்புகள் எனப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எமது இந்தப் போராட்டத்தின் ஊடாக எமக்குப் பதிலளிக்குமாறு கோரப்படுவதுடன் மாத்திரமன்றி, வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான சர்வதேச மனித உரிமைகள் நியமங்கள் மற்றும் கடப்பாடுகளைப் பின்பற்றிச் செயற்படுமாறும் வலியுறுத்தப்படுகிறது.
எமது இந்தத் தொடர் போராட்டமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேசப் பொறிமுறைகளுடனான நிலையான தொடர்புகளும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் நியமங்களைப் பாதுகாப்பதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் நாம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
மறுபுறம் தொடர் வலியுறுத்தல்களின் பின்னரும் நம்பத்தகுந்ததும், பக்கச்சார்பற்றதும், செயற்திறன் மிக்கதுமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு உள்நாட்டு அரசாங்கங்கள் தவறியிருக்கின்றன. அதன்விளைவாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான உண்மை, நீதி மற்றும் சர்வதேச நியமங்களுக்கு அமைவான இழப்பீடு என்பன உறுதிசெய்யப்படவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், பாதிக்கப்பட்டோருக்கான நீதியை நிலைநாட்டுவதற்கும் நம்பத்தகுந்த சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோன்று இறுதிக்கட்டப்போரின்போது எமது உறவுகள் சரணடைந்த மற்றும் நாமாகக் கையளித்த சோதனைச்சாவடிகளுக்குப் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்தவும், அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
அத்தோடு உள்ளகப்பொறிமுறைகள்மீது நம்பிக்கை இழந்து, அவற்றை நிராகரித்திருக்கும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளிக்கப்படவேண்டும். மேலும் தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஆதரவளிக்கவேண்டும் என அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுங்கள்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space