புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பல்வேறு வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 400க்கு மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடத்தப்பட்ட சுமார் 2000 சோதனை நடவடிக்கைகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள், கடைகளின் தூய்மை, சுற்றுச்சூழல் குறித்து ஆராயப்பட்டது.
இதில் சுகாதாரமற்ற சூழலில் உணவுகளை விற்பனை செய்வது, காலாவதியான உணவுப் பொருட்களை விநியோகிப்பது முதலான பல்வேறு குற்றங்களுக்காக 400க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் வெசாக், பொசன் பண்டிகை நாட்களை முன்னிட்டும் இதுபோன்ற சோதனை நடவடிக்கைகள் நடத்தப்படும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.