வவுனியாவில் நடைபெறவுள்ள ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தில் குறிப்பாக மாகாணசபைத்தேர்தலை விரைவாக நடாத்துவதற்குரிய அழுத்தங்களை வழங்குவது தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

மாகாணசபைத்தேர்தல்கள் எந்த முறைமையின்கீழ் நடாத்தப்படவேண்டும் என்பதை ஆராய்வதற்கும், அதுகுறித்த விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கும் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்ட 12 பேரடங்கிய விசேட செயற்குழுவை நியமிப்பதற்கான யோசனை ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸவினால் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இவ்வாறு பாராளமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பது என்பது மாகாணசபைத்தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்குப் பயந்த அரசாங்கம், அதனை உடன் நடாத்தாமல் இழுத்தடிப்புச் செய்வதற்கு மேற்கொள்ளும் ஒரு முயற்சி மாத்திரமேயாகும் என தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஏற்கனவே கடும் விசனத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

அதேவேளை அண்மையில் தேசிய பத்திரிகைகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளைச் சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, அரசாங்கம் வெகுவிரைவில் மாகாணசபைத்தேர்தலை நடாத்தவேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும் எனத் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் ஞாயிற்றுக்கிழமை (18) வவுனியாவில் கூடவுள்ள ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியின் பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள், மாகாணசபைத்தேர்தலை இழுத்தடிக்கும் நோக்கில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சி குறித்தும், அதனை முறியடித்து மாகாணசபைத்தேர்தலை விரைவாக நடாத்துவதற்குரிய அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாக ஆராயவுள்ளனர்.