பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்பது தனிநபர்களை இலக்காகக் கொண்டு மதிப்பிடப்பட வேண்டிய சட்டமல்ல. அந்தச் சட்டத்தின் இயல்பே ஜனநாயகத்துக்கு எதிரானதாக இருக்கிறது. இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தியவர் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன. ஆனால் இன்று அவர் உயிருடன் இருந்து, அவரையே அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்தாலும் கூட நாம் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்போமென முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
நுகேகொடவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது சுரேஷ் சலே காரணமாக அல்ல. ஒருவரை பாதுகாப்பதற்காகவோ அல்லது ஒருவரை குறிவைப்பதற்காகவோ இந்த நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அந்தச் சட்டம் அடிப்படையில் ஜனநாயக உரிமைகளை மீறுகின்ற சட்டமாக இருப்பதாலேயே அதற்கு எதிராக இருக்கின்றோம்.
இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தியவர் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன. ஆனால் இன்று அவர் உயிருடன் இருந்து, அவரையே அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்தாலும் கூட நாம் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்போம். ஏனெனில் எமது எதிர்ப்பு தனிநபர்களுக்கு எதிரானதல்ல. சட்டத்தின் தன்மைக்கு எதிரானதாகும்.
நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்ட விதம் தொடர்பில் பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. நீண்டகால தடுப்புக் காவல், அடிப்படை உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் நீதித்துறை கண்காணிப்பின்றி அதிகாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே இந்தச் சட்டம் தொடர்பில் விவாதிக்கும்போது யார் கைது செய்யப்பட்டார்கள், யார் மீது பயன்படுத்தப்படுகிறது என்பதல்ல முக்கியம். அந்தச் சட்டம் ஜனநாயக சமூகத்துக்க பொருத்தமானதா என்பதே முக்கியமான கேள்வியாகும்.
அதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உண்மையை வெளிக்கொணர வேண்டும் எனில் அரசியல் நோக்கங்களின்றி சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகளில் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக பெயர் குறிப்பிடப்பட்ட சிலர் தற்போது உயர்மட்ட பதவிகளில் உள்ளனர். அதே நேரத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுடனும் அவர்கள் தொடர்புபட்டுள்ளனர்.
இந்த நிலைமை தொடர்பில் சமூகத்தில் சந்தேகங்கள் எழுவது இயல்பானது. உண்மையான நீதி நிலைநாட்டப்பட வேண்டுமெனில் முழுமையான வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் அவசியமாகும்.
மேலும் அரசியல் அதிகாரத்தைப் பெற்றவர்கள் தங்களது தீர்மானங்களுக்கு தாங்களே பொறுப்பேற்க வேண்டும். பின்னர் தவறுகள் ஏற்பட்டபோது வேறு தரப்பினரின் ஆலோசனைகளை காரணமாகக் கூறி பொறுப்பிலிருந்து விலக முடியாது. மக்கள் தேர்தல்களில் வழங்கிய ஆணையை மதித்து அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றார்.