இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 20 அம்சத் திட்டத்தின் ஒரு பகுதியாக, "சமாதான சபை" (Board of Peace) என்ற புதிய உயர்மட்டக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

வொஷிங்டன் வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தச் சபையின் 'ஸ்தாபக நிறைவேற்றுச் சபையில்' (Founding Executive Board) அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர், ட்ரம்பின் மருமகனும் முன்னாள் ஆலோசகருமான ஜாரெட் குஷ்னர், ட்ரம்பின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கோஃப், உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தச் சபையின் தலைவராகச் செயற்படுவார்.

இந்தச் சமாதான சபை தற்காலிகமாக காசாவின் நிர்வாகத்தைக் கண்காணிப்பதோடு, போரினால் அழிந்துபோன காசாவை மீண்டும் கட்டியெழுப்பும் (Reconstruction) பணிகளையும் நிர்வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, காசாவில் ஆட்சி அதிகாரத்தை முன்னெடுக்க நியமிக்கப்பட்டுள்ள 'பலஸ்தீன தொழில்நுட்பக் குழுவை' (NCAG) இந்தச் சபை கண்காணிக்கும்.

மேலும், காசாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த ஒரு சர்வதேச பாதுகாப்புப் படையை (International Stabilization Force) உருவாக்குவதிலும் இந்தச் சபை முக்கிய பங்காற்றும்.

இதனிடையே, பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி பிளேயரின் நியமனம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு ஈராக் மீதான படையெடுப்பில் அவர் வகித்த பங்கு காரணமாக, இந்தப் புதிய பொறுப்பில் அவரது தலையீட்டைச் சில மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.



இருப்பினும், இந்தச் சபையானது "இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் கௌரவம் மிக்க சபை" என்று ஜனாதிபதி ட்ரம்ப் வர்ணித்துள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் மேலதிக உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.