அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜ் நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.காமராஜ், கட்சியின் நிலைப்பாட்டை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனது ஆதரவை தெரிவித்திருப்பது, கட்சியின் குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கு முரணானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காமராஜின் இன்றைய செயல்பாடு, அவரின் வெற்றிக்காக பாடுபட்ட அமமுக கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும், அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் இழைத்திருக்கும் மிகப்பெரிய துரோகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து சொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரம் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாரும், காமராஜை கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இன்று (12) செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் பேசிய அமமுக எம்எல்ஏ காமராஜ், தவெக அரசையும், அதன் தலைவரும், முதலமைச்சருமான விஜய்யை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசும்போது, முதலமைச்சராக விஜய் பதவியேற்றவுடன், கோடிக்கணக்கான ரூபாயில் ஏதேதோ இலவச திட்டங்களை அறிவிப்பார் என பெரும்பாலானோர் நினைத்திருந்ததாகவும், ஆனால், மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை முதலில் அறிவித்ததை தான் மிகவும் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தவெக அரசு 5 ஆண்டுகள் ஆள வேண்டும் எனவும், நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கையில், அந்த வகையில் சட்டமன்றத்திற்குள் நிறைய இளைஞர்கள் வந்திருப்பதாகவும், முதலமைச்சர் விஜய்யும் இளைஞரான இருப்பதால் ஒரு சிறந்த ஆட்சியை அவர் தருவார் என்று நம்புவதகாவும் தெரிவித்துள்ளதோடு, அவர், அதனால் அவர்களை ஆதரித்து பேசுவதாகவும் காமராஜ் தெரிவித்துள்ளார்.

75 ஆண்டு, 50 ஆண்டுகால ஆட்சிக்கு விஜய் முன்னுதாரமாக இருக்க வேண்டும் எனவும், இளைஞர்கள் அவரை நம்புவதாகவும், அதனால் தானும் அவரை நம்புவதால் புகழ்ந்து பேசுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.