இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த்தரப்புக்கள் அனைத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19 ஆம் திகதி தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 14 - 21 ஆம் திகதி வரை சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றது.
அச்செயலமர்வில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, பிரதியமைச்சர் முனீர் முளப்பர், பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளருமான நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டியாராச்சி, நிலாந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க ஆகியோரும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவலவும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கமும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரளவும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனும், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் டபிள்யூ.ரி.பத்மா மஞ்சுளவும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான கபிலன் சுந்தரமூர்த்தியும் கலந்துகொண்டிருந்தனர்.
அச்செயலமர்வின்போது சுவிட்ஸர்லாந்தின் அரசியல் முறைமை மற்றும் இருதரப்பு உறவுகள், சுவிட்ஸர்லாந்தின் கூட்டாட்சி (பெடரல்) முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்ளல் ஆகிய தலைப்புக்களில் இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதுடன், அதனுடன் தொடர்புடைய முக்கிய கட்டமைப்புக்களுக்கான கள விஜயங்கள் மற்றும் உயர்மட்ட சந்திப்புக்கள் என்பனவும் இடம்பெற்றன.
அவ்விஜயத்தைத் தொடர்ந்து அதுபற்றி அதில் பங்கேற்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பிரதிநிதிகளிடம் கேட்டறிந்த இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ற், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனையும் சந்தித்து மேற்படி விஜயம் குறித்து விளக்கமளித்திருந்தார்.
இவ்வாறு நிகழ்ந்த சந்திப்புக்களின்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தைப் பொறுத்தமட்டில் சகல தமிழ்த்தேசியக் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டியது அவசியம் என்பன விடயம் தமிழ்ப்பிரதிநிதிகளால் தூதுவர் சிறி வோல்ற்றிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஒருங்கிணைப்பில் ஒரு கூட்டு சந்திப்பை நடாத்துவதற்கு தமிழ்த்தேசியக் கட்சிகள் உடன்பட்டதை அடுத்து, அதனை எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் அதன் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்றக்குழுத்தலைவர் இரா.சாணக்கியன், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன் மற்றும் ப.சத்தியலிங்கம் ஆகியோரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பம் மற்றும் கட்சி தீர்மானிக்கும் பிறிதொருவரும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் கூட்டணி தீர்மானிக்கும் பிறிதொருவரும் கலந்துகொள்ளவுள்ளனர். அதுமாத்திரமன்றி சிவில் சமூகத்தின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனுக்கு அழைப்புவிடுப்பதற்கு சுவிஸ் தூதரகம் தீர்மானித்திருப்பதாக அறியமுடிகின்றது.
சுவிட்ஸர்லாந்து உயர்ஸ்தானிகர் சிறி வோல்ற்றின் மத்தியஸ்தத்தில் நடைபெறவிருக்கும் இச்சந்திப்பின்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சகல தமிழ்த்தரப்புக்களும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வருவது பற்றிக் கலந்துரையாடப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ்த்தரப்புக்கள் பொதுநிலைப்பாட்டை எட்டுவதற்கு முயற்சி ; சுவிஸ் தூதரகத்தின் ஏற்பாட்டில் 19 ஆம் திகதி பேச்சுவார்த்தை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space