நாட்டின் பல வைத்தியசாலைகளில் பதிவான நோயாளிகளின் மரணங்களுக்குக் காரணமென சந்தேகிக்கப்படும் “ஓண்டான்செட்ரான்” தடுப்பூசி விவகாரத்தில், சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து மௌனம் சாதிப்பது குறித்து விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
''குறித்த தடுப்பூசி தொடர்பான ஆய்வறிக்கைகள் மற்றும் தரவுகள் இதுவரை பொதுமக்களுக்கு ஏன் வெளிப்படுத்தப்படவில்லை'' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டில் குறித்த தடுப்பூசியுடன் தொடர்புடைய மரணங்கள், நாடளாவியரீதியில் பல வைத்தியசாலைகளில் பதிவாகியுள்ளதாக சுட்டிகாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் ,கண்டி தேசிய வைத்தியசாலையில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட சோதனைகளில் , சில தடுப்பூசித் தொகுதிகளில் பாக்டீரியா நச்சுகள் கண்டறியப்பட்டதாக மருந்துகள்ஒழுங்குமுறை ஆணையகம் கண்டறிந்துள்ளது.
இதே போன்று சநதேகத்திற்குரிய தடுப்பூசிகள் பயன்பாட்டிலிருந்து திரும்பப் பெறப்பட்டதாகவும்,இதுகுறித்தான விளக்கம் எதுவும் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
முறையான மேற்பார்வையின்றி இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டால், நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என்று வைத்திய நிபுணர் சஞ்சீவ எச்சரித்துள்ளார்.
மேலும், அதிகாரிகள் அதிக வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.