இலங்கைக்கு தங்களை மீள அனுப்புமாறு இந்திய முகாமில் வசிக்கும் மன்னாரைச் சேர்ந்த ராஜினி கோரிக்கை விடுக்கின்றார்.
இது தொடர்பில் நேற்று (5) மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு இந்திய ஊடகங்களிடம் தனது நிலை தொடர்பாக தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தாங்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் போதியளவு அடிப்படை மற்றும் உணவு வசதிகள் இல்லாததால் தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்புமாறு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை தம்மை அனுப்பி வைக்காததால் மிகுந்த அவதிப்பட்டு வருவதாகவும் இந்த விடயத்தில் இலங்கை ஜனாதிபதி உதவவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றார்.
இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக 2023ஆம் ஆண்டு மே மாதம் மன்னாரில் இருந்து கடல்வழியாக இந்தியாவிற்கு சென்று இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜிம்ஸ்ரிக் அவரது மனைவி கிறிஸ்ரபேல் ராஜினி குடும்பத்தினர் தம்மை மீள இலங்கைக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தங்களுடன் தங்கியிருந்த 13 குடும்பங்களில் 9 குடும்பங்கள் சட்டவிரோதமான முறையில் பணம் செலுத்தி படகில் இலங்கைக்கு மீண்டும் சென்றுள்ளதாகவும் தம்மிடம் படகில் செல்வதற்கு போதியளவு பண வசதி இல்லாத காரணத்தினால் தங்களால் செல்ல முடியாமல் உள்ளதாகவும் ராஜினி தெரிவித்தார்.
அத்துடன் இந்தியாவில் தங்களால் தொடர்ந்து வசிக்க முடியாதுள்ளதாகவும் தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்புமாறும் இந்திய ஊடகங்களிடம் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2022 மார்ச் மாதம் 20ஆம் திகதியிலிருந்து 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக வரத் தொடங்கியதாகவும் தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்களை தமிழக அரசு மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.