தென்னிலங்கையில் தமிழ் பெண்ணொருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்லவத்தை, மகம கிரிவானகெட்டிய தோட்ட குடியிருப்பில் வசித்து வந்த 77 வயதான பெருமாள் லட்சுமி என்ற வயோதிப பெண் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவன் உயிரிழந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், அதற்காக அன்னதானம் வழங்கும் நிகழ்விற்கு வீட்டினை தயார் செய்து வந்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று மதியம் வீட்டின் வர்ணம் பூசும் பணிகளை முடித்துவிட்டு, தொழிலாளிக்கு சம்பளம் வழங்கிய பின்னர் மூதாட்டி தேநீர் தயாரித்துக் கொண்டிருந்ததாகத் தெரியவருகிறது.
மாலை 5 மணியளவில் தொழிலாளி மீண்டும் வந்து பார்த்தபோது, மூதாட்டி சமையலறையில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
சடலமாகக் கிடந்த மூதாட்டியின் முகத்தின் மீது 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் வைக்கப்பட்டிருந்ததாக அவரது மகள் மனோகரி தெரிவித்துள்ளார்.
வீட்டிலிருந்த தங்க நகைகள், 50,000 ரூபாய் பணம் என்பன திருடப்படவில்லை என உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மூதாட்டியின் நெற்றியிலும் கண்ணிலும் பலத்த காயங்கள் காணப்படுவதால், இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என உறவினர்கள் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த நேரத்தில் அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள், குறித்த வீட்டிலிருந்து நாய் விசித்திரமான முறையில் கத்தும் சத்தம் கேட்டதாகக் கூறியுள்ளனர்.
உயிரிழந்த மூதாட்டி ஆறு பிள்ளைகளின் தாயார் என்பதோடு, அவர் அடுத்த மாதம் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மர்ம மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்லவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், பிரேத பரிசோதனைக்காகச் சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தென்னிலங்கையில் தமிழ் பெண் ஒருவர் கொலை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space