இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அறிக்கைகள் மற்றும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, 2009ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நிலக்கரி இறக்குமதிகள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஜனாதிபதியின் செயலாளர் இன்று சனிக்கிழமை (11) முற்பகல் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டின் மூலம், கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் முறைகேடுகள், ஒப்பந்த நடைமுறைகள், மற்றும் நிதி தொடர்பான சிக்கல்கள் ஆகியவை முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளன.
மேலும், இந்த விசாரணை நடவடிக்கைகள் மூலம் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்படுவதோடு, எதிர்காலத்தில் இத்தகைய முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.