சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தில் அரசியல் கைதி என்பற்கு பொருட்கோடல் வழங்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைப்படுத்தப்படவில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
சிறைச்சாலை கட்டளைச் சட்டம் மற்றும் ஏனைய சிறைச்சாலை ஒழுங்குவிதிகளில் அரசியல் கைதிகள் என்று வேறுப்படுத்தப்பட்ட குழு தொடர்பில பொருட்கோடல் வழங்கவில்லை.
சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருட்கோடலை ஏற்றுக் கொள்கிறோம். நீதிமன்றத்தின் ஊடாக கைதிகள் சந்தேக நபராகவோ அல்லது குற்றவாளிகளாகவோ அடையாளப்படுத்தப்படுகிறார்கள்
அரசியல் கைதிகள். என்று எவரும் நீதிமன்றத்தால் விளக்கமறியலிலோ அல்லது தடுப்புக் காவலிலோ வைக்கப்படவில்லை. இதற்கமைய அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்றார்.
இதன்போது மேலதிக கேள்விகளை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா, இந்த நாட்டில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று நீதியமைச்சர் குறிப்பிடுகிறார்.
ஆனால் தேர்தல் காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் பிரசாரம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக குறிப்பிட்டார்.இந்த நிலைப்பாட்டில் அரசாங்கம் இன்றும் உள்ளதா ? என்றார்.
இதற்கு பதிலளித்த நீதியமைச்சார் இந்த பட்டியலை நான் பலமுறை ஆராய்ந்தேன்.அனைவருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பலர் குற்றவாளியாக்கப்பட்டுள்ளார்கள்.
நாட்டின் சட்டத்தை மீறிய குற்றத்தால் தான் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இருப்பினும் அப்போதைய அரசியல் சூழலை நன்கு அறிவோம்.
சிறைச்சாலையில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முன்னாள் நீதியரசர் துரைராசா சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கு அமைய கைதிகளின் தண்டனை காலத்தை குறைக்கவும்,பொது மன்னிப்பு வழங்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த விடயத்தில் வடக்கு,கிழக்கு,தெற்கு என முழு நாடும் உள்ளடக்கப்படும் என்றார்.