உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களிலும் பல வெற்றிடங்களும், வழக்குகளும் நிலுவையில் காணப்படுகின்ற நிலையில்  அவற்றுக்கு தீர்வு காணாமல்  நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிக்க முயற்சிப்பது முறையற்றது.முக்கியமான இப்பிரச்சினைகளைப் புறந்தள்ளிவிட்டு, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையின்  பின்னணியில் ஏதோவொரு உள்நோக்கம் உள்ளதோ என்ற பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.இவ்வாறான நடவடிக்கைகள் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பக்கூடும் என சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் மற்றும் நீதியரசர்களின் பதவி காலத்தை அதிகரிப்பதற்கு எடுத்துள்ள முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். தற்போது முறையே 63 மற்றும் 65 வயதாகக் காணப்படும் மேன்முறையீட்டு நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை, அரசியலமைப்புத் திருத்தம் மூலம் மேலும் இரண்டு வருடங்களால் நீடிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சியை தீவிரமாக அவதானித்துள்ளோம்.

தற்போது உயர் நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் எட்டு வெற்றிடங்கள் காணப்படுகிறது.  அரசியலமைப்பின் படி இந்த பதவிகளை நிரப்ப வேண்டிய கட்டாயம் இருந்தபோதிலும், ஜனாதிபதி நீண்ட காலமாக இந்த வெற்றிடங்களை நிரப்பத் தவறியுள்ளார்.இந்தத் தவறுதலானது ஒரு பாரதூரமான அரசியலமைப்பு மீறலாகக் கருதப்படலாம். இது ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையின்மையின்  அடிப்படையாகக் கூட அமையலாம்.

தற்போது உயர் நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் ஏராளமான வழக்குகள் நிலுவையில்  காணப்படுகிறது. நீதியை விரைவுபடுத்துவதற்கு, நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

விசாரணைகளை வேகப்படுத்துவதற்கு நீதித்துறை வெற்றிடங்களும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.எனினும், இவ்வாறான அத்தியாவசிய நடவடிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு, நீதிபதிகளின் சேவைக்காலத்தை மாத்திரம் நீடிப்பது நீதிமன்ற விவகாரங்களில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்க உதவாது.

முக்கியமான இப்பிரச்சினைகளைப் புறந்தள்ளிவிட்டு, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் ஏதோவொரு உள்நோக்கம் உள்ளதோ என்ற  சந்தேகத்தை எழுப்புகிறது.இவ்வாறான நடவடிக்கைகள் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பக்கூடும்.