மத்திய மாகாணத்தில் மீண்டும் மழையுடனான காலநிலை ஆரம்பித்துள்ளதால் அங்குள்ள மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதற்கமைய நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை மற்றும் நில்தண்டாஹென பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும், கண்டி மாவட்டத்தில் பஹத ஹேவாஹெட்ட பிரதேச செயலகப்பிரிவுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வசந்த சேனதீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பதிவாகியுள்ள கடும் மழை காரணமாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதற்கமைய நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை மற்றும் நில்தண்டாஹென பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் அவதானத்துடன் இருப்பதற்கான எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மேலும் கண்டி மாவட்டத்தில் பஹத ஹேவாஹெட்ட பிரதேச செயலகப்பிரிவுக்கு முதலாம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பரில் பதிவான மழை வீழ்ச்சியும் இதில் நிச்சயம் தாக்கம் செலுத்தும். தற்போதும் வலப்பனை போன்ற பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. எனவே குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள் அது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். எனவே ஏதேனும் அபாயமான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் மக்கள் உடனடியாக அந்த பிரதேசங்களிலிருந்து வெளியேற வேண்டும்.

கடந்த ஆண்டு சீரற்ற காலநிலை நிலவிய போது பாதுகாப்பான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. எனவே தாமதிக்காது அவ்வாறான இடங்களுக்குச் செல்லுமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் பல பிரதேசங்களில் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. எனவே அந்த மாவட்டங்களிலும் ஆபத்தான பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடனிருக்க வேண்டும் என்றார்.