அனுராதபுரம், நொச்சியாகம நொச்சியாகம நிலையத்தில் கடமையாற்றி வரும் ஒரு சில அதிகாரிகள் பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும், பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோருவதாகவும் பாதிக்கப்பட்ட ஒரு தாய் மற்றும் மகன் குற்றம் சாட்டியுள்ளனர்.

தாம் திருந்தி வாழ முற்படும் வேளையில் காவல் துறை திட்டமிட்டு போலி வழக்குகளைச் சுமத்துவதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (04) கணவனை இழந்து 10 ஆண்டுகளாகத் தனது பிள்ளைகளை வளர்த்து வரும் ஒரு தாய், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் தான் சில தவறுகளைச் செய்திருந்தாலும் தற்போது அவற்றிலிருந்து விடுபட்டுக் கௌரவமாக வாழ முயற்சித்து வருகிறோம். இருப்பினும், நொச்சியாகம காவல் துறை நிலையத்தின் சில அதிகாரிகள் பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே வைத்துத் தன்னிடம் பாலியல் ரீதியான உதவிகளை (பாலியல் இலஞ்சம்) கோருவதாகவும், அதற்கு இணங்காத பட்சத்தில் போலி போதைப்பொருள் வழக்குகளில் சிக்க வைப்பதாக அச்சுறுத்தி வருகின்றனர். தான் தவறு செய்திருந்தால் சட்டப்படி தண்டனை வழங்குவதை ஏற்கத் தயார் என்றும், ஆனால் ஒரு பெண்ணாகத் தனது கௌரவத்தைச் சிதைக்கும் வகையில் பொலிஸார் நடப்பதைத் தடுத்து நிறுத்த ஜனாதிபதி தலையிட வேண்டும் என்றார்.

சம்பவம் தொடர்பில் அந்தப் பெண்ணின் மகன் கூறுகையில்,

அண்மையில் நகரத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, பொலிஸார் எம்மைத் துரத்திப் பிடித்துக் கடுமையாகத் தாக்கினார்கள். தான் எவ்வித குற்றமும் செய்யாத நிலையிலும், தாக்குதலில் இருந்து தப்பிக்க "கஞ்சா வைத்திருந்ததாக" பொய்யாக ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். அந்தச் சந்தர்ப்பத்தில் என்னிடமிருந்த சுமார் 60 ஆயிரம் ரூபா பணத்தைப் பொலிஸார் அபகரித்தனர். 'விஜயரத்ன' மற்றும் 'கருணாரத்ன' ஆகிய அதிகாரிகள் தனக்கு எதிராகத் திட்டமிட்டுச் செயற்படுவதாகவும், "உன்னை எப்படியாவது சிறைக்கு அனுப்புவேன்" எனவும் அச்சுறுத்தினார்கள் என்றார்.