மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல்கள் மற்றும் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையின் பணவீக்கம் 7 சதவீதம் வரை உயரக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (01) ஒளிபரப்பான 360 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், எண்ணெய் விலை உயர்வின் தாக்கத்தால் பணவீக்கம் முதலில் 5 சதவீதத்தைத் தாண்டி, தற்போதைய நிலை நீடித்தால் 7 சதவீதம் வரை உயரக்கூடும் என்றார்.
இந்த நிலையை எதிர்கொள்ளும் வகையில், கடந்த வாரம் பணவியல் கொள்கை கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும், தேவையைக் கட்டுப்படுத்தி பணவீக்கத்தை சமநிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சட்டப்பூர்வமாக சம்பாதிக்கப்பட்ட எந்தவொரு பணத்தையும் வங்கி நடைமுறைகள் ஊடாக இலங்கைக்கு அனுப்புவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும், சட்டவிரோத நிதிகளுக்கே கட்டுப்பாடுகள் பொருந்தும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.