அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவு, அடிப்படை உரிமைகளைப் பணயம் வைத்து உண்மையான பாதுகாப்பை ஒருபோதும் உறுதிசெய்யமுடியாது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாக 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்' எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலீடாக நீதியமைச்சினால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்து நாம் எமது தீவிர கரிசனையை வெளிப்படுத்துகின்றோம்.
தேசிய பாதுகாப்பையும், பொது ஒழுங்கையும் உறுதிப்படுத்துவதற்கான கடப்பாடு அரசுக்கு உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் சட்ட வரைவானது பல தசாப்தகாலமாக இன மற்றும் மத சிறுபான்மையினருக்குத் தீங்கு ஏற்படுத்துவதற்கு வழிகோலிய மிகமோசமான சரத்துக்களில் பெரும்பாலானவற்றை உள்ளடக்கியிருக்கின்றது.
இந்நிலையில் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களின் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு செயற்திட்டத்தின் ஊடாக ஒடுக்குமுறைச்சட்டங்களை மறுசீரமைத்தல், ஜனநாயக ஆட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பல் ஆகிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இப்புதிய சட்ட வரைவு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாதத்தடைச்சட்டமானது வலுகட்டாயக் கைது, வழக்குப் பதிவற்ற நீண்டகாலத் தடுத்துவைப்பு, வற்புறுத்தல் அடிப்படையிலான விசாரணைகள் மற்றும் கருத்துச்சுதந்திரம் ஒடுக்கப்படல் உள்ளிட்ட முறையற்ற பயன்பாடு தொடர்பான நீண்டகால வரலாற்றைக் கொண்டிருக்கின்றது.
அச்சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் சிறுபான்மையின மக்கள் மத்தியில் அச்சத்தையும், நம்பிக்கையீனத்தையும், புறந்தள்ளப்படல் உணர்வையும் விதைக்கும் நோக்கில் அவர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டு வந்திருக்கின்றது.
அச்சட்டம் மறுசீரமைக்கப்படும் எனத் தொடர் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், அச்சட்டத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், பரந்துபட்ட விடயங்களை உள்ளடக்கியதும், தனிநபர் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்படாதுமான பயங்கரவாதத்தடைச்சட்டங்கள் மீறல்களுக்கே வழிகோலும் என்பது நன்கு வெளிப்பட்டுள்ளது.
அதேவேளை இப்புதிய சட்ட வரைவில் பயங்கரவாதக்குற்றம் எனும் பதத்துக்கு சர்வதேச நியமங்களுக்கு உட்படாதவாறு, மிகப்பரந்துபட்ட வரைவிலக்கணம் அளிக்கப்பட்டிருப்பது குறித்து நாம் மிகுந்த கரிசனையடைகின்றோம். அவ்வாறான சரத்துக்களால் குறிப்பாக சிறுபான்மையின சமூகங்களால் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் முன்னெடுக்கப்படக்கூடிய மத ரீதியான, சிவில் சமூக மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு எதிராக வலுவான அச்சுறுத்தல் தோற்றுவிக்கப்படும்.
அடிப்படை உரிமைகளைப் பணயம் வைத்து உண்மையான பாதுகாப்பை ஒருபோதும் உறுதிசெய்யமுடியாது. அரசைப் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்படும் சட்டங்கள், எவ்வித ஒடுக்குமுறைகளுமின்றி பொதுமக்களையும் பாதுகாக்கக்கூடியவகையில் அமையவேண்டும். அதுமாத்திரமன்றி அவை நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு உட்பட்டவையாகவும் இருக்கவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்து தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ கூட்டிணைவு தீவிர கரிசனை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space