ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகஹஹேன வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை (09) இரவு இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

ஹோமாகம பசுமைப் பல்கலைக்கழக (NSBM Green University) மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் குழுவொன்றினால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் நிகதலுபொத, வெல்லவ பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த ஹோட்டலில் ஹோமாகம பசுமைப் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று ஏற்பாடு செய்திருந்த விருந்துபசாரம் ஒன்றின் போது, மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று நடைபெறவுள்ளது. தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.