கிளிநொச்சி A9 வீதியில் இருந்து மாவட்ட செயலகம் வரை செல்லும் சுமார் 300 மீற்றர் நீளமுடைய திருநகர் முதன்மை வீதியை இருவழி வீதியாகப் புனரமைக்கும் திட்டத்தின் கீழ், அங்குள்ள பழமையான ஆலமரத்தை அகற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி திட்டத்திற்கு வரவேற்பு தெரிவிக்கும் அதேவேளையில், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த அந்த மரத்தை வெட்டாமல் பாதுகாக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரிடம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களால் கோரிக்கை மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.திருநகர் வீதிக்கு அருகிலேயே அதற்கு இணையாக 'ஸ்டேஷன் வீதி' அமைந்துள்ளது. எனவே, திருநகர் வீதியை மாவட்ட செயலகத்திற்குள் செல்லும் ஒருவழிப் பாதையாகவும் (A9 → திருநகர் வீதி → மாவட்ட செயலகம்), ஸ்டேஷன் வீதியை வெளியோறும் ஒருவழிப் பாதையாகவும் (மாவட்ட செயலகம் → ஸ்டேஷன் வீதி → A9) மாற்றுவதன் மூலம் மரத்தைச் சுற்றியுள்ள வீதி அகலப்படுத்தும் தேவைக் குறையும் எனவும் அல்லது வீதியின் வடிவமைப்பு, வடிகான் அமைப்பு மற்றும் வீதியோரப் பகுதிகளைச் சிறிய அளவில் மாற்றி அமைப்பதன் மூலமும் மரத்தைத் தப்ப வைக்க முடியும்.மேலும்,  மரத்தின் தற்போதைய ஆரோக்கிய நிலை குறித்து தாவரவியல் நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட வேண்டும். மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பரிந்துரைகளைப் பெறுவதுடன், மாற்று வழிகள் குறித்து வீதி அபிவிருத்தித் திணைக்களம் உட்பட துறைசார் அதிகாரிகளுடன் இணைந்த களப்பார்வை மற்றும் போக்குவரத்து ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே இறுதி தீர்மானம்  எடுக்கப்பட வேண்டும் என அம்மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.