நீதித்துறையை குடும்ப ஆட்சியில் கட்டுப்படுத்த முயற்சித்தவர்களும், பிரதம நீதியரசரின் வீட்டுக்கு கல்லெறிந்தவர்களும் தான் இன்று நீதித்துறை பற்றி பேசுகிறார்கள். அரசியல் அதிகாரத்தை அதிகரித்து கொள்வதற்காக நாங்கள் 22 ஆம் திருத்தத்தை கொண்டு வர முயற்சிக்கவில்லை. நீதித்துறையை பலப்படுத்தவும், சேவைகளை வினைத்திறனாக்குவதற்காகவுமே உத்தேச 22 ஆம் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. இதன் பயன் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்குமே கிடைக்கும். கடந்தகால படுகொலைகள், ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளதால் ஒருசிலர் கலக்கமடைந்துள்ளார்கள். இவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக நீதித்துறையை மறுசீரமைக்காமல் இருக்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (4) இடம்பெற்ற கல்விக்கான செலவினத் தலைப்பு மீதான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
2025 ஆம் ஆண்டு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நாட்டை மேம்படுத்திய நாடு. பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த பின்னணியில் தான் தித்வா புயல் தாக்கம் மற்றும் மத்திய கிழக்கு மோதலுக்கு முகங்கொடுத்தோம். இந்த சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டு பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறோம்.
வெளியக தாக்கங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்களை முகாமைத்துவம் செய்துக் கொண்டு நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்கிறோம். வெளியக தாக்கங்களினால் மீண்டும் 2022 ஆம் ஆண்டுகால சூழல் தோற்றம் பெறும் என்று எதிர்கட்சியினர் குறிப்பிட்டார்கள். எதிர்பார்த்தார்கள். ஆனால் அவ்வாறு ஏதும் இடம்பெறவில்லை. வெளியக தாக்கங்களினால் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கப்பட்டது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வடைந்தது.
குறை நிரப்பு பிரேரணை ஊடாக மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கு போதுமான நிதி ஒதுக்கப்பட்டது.பொருளாதார மீட்சிக்கு மத்தியில் ஊழலை ஒழிப்பதற்கும் சட்டவாட்சியை உறுதிப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மெதமுல்லவின் சட்டத்தால் தான் இந்த நாடு வங்குரோத்து நிலையடைந்தது.
பொலிஸ்மா அதிபரை வீதியில் வைத்து அடித்து கொலை செய்யும் நிலை ஏற்படும் என்று குறிப்பிடுபவர்களை மக்கள் விரட்டியடித்ததை மறந்து விட்டார்கள். குடும்ப ஆட்சியால் தான் இந்த நாடு வங்ரோத்து நிலையடைந்தது என்பதை எவரும் மறந்து விடக் கூடாது. ரணில் விக்கிரமசிங்கவால் தான் இவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள்.People & Society
கடந்த கால பொலிஸ்மா அதிபர்கள் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். தேசபந்து தென்னக்கோன் அடிப்படை மனித உரிமை மீறல் குற்றவாளி என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களை யார் பாதுகாத்தது.இவர்கள் தான் இன்று சட்டத்தின் பிரகாரம் துணிவுடன் செயற்படும் அரச அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்.
கடந்த கால அரசியல் படுகொலைகள், ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளை விரைவுப்படுத்துவதற்காகவே நீதித்துறையை மறுசீரமைக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. நிலுவையில் உள்ள 11 இலட்ச வழக்குகளில் பெரும்பாலானவை அரசியல் படுகொலைகள், ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்குகளே. இவர்கள் கடந்த காலங்களில் முறையற்ற வகையில் செயற்படாமல் இருந்திருந்தால் வழக்குகள் நிலுவையில் இருந்திருக்காது.
நீதித்துறையை வினைத்திறனாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று மக்களுக்கு வாக்குறுதியளித்தோம். அதற்காகவே மக்கள் ஆணை வழங்கினார்கள். இதன் ஒரு பகுதியாகவே நீதிபதிகளின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. வழக்குகள் விரைவுப்படுத்தப்படுவதால் ஒருசில குற்றவாளிகள் அச்சமடைந்துள்ளதற்காக மறுசீரமைப்புக்களை முன்னெடுக்காமல் இருக்க முடியாது.
கடந்த கால வழக்குகள் எதனையும் சட்டமா அதிபர் திணைக்களம் மீளப்பெறுவதில்லை. நீதிமன்றத்தின் நடவடிக்கைகளையும், தீர்ப்புக்களையும் மக்கள் உன்னிப்பாக அவதானிக்கிறார்கள். தீர்ப்புக்களை கொண்டாடுகிறார்கள். ஆகவே நீதிமன்ற மறுசீரமைப்புக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தமது குற்றத்துக்கான தண்டனை என்னவென்பதை குற்றவாளிகள் நன்கு அறிவார்கள் அதனால் தான் கூட்டணியமைத்து ஊடக சந்திப்புக்களை நடத்துகிறார்கள்.
நீதித்துறையை குடும்ப ஆட்சியில் கட்டுப்படுத்த முயற்சித்தவர்களும், பிரதம நீதியரசரின் வீட்டுக்கு கல்லெறிந்தவர்களும் தான் இன்று நீதித்துறை பற்றி பேசுகிறார்கள். அரசியல் அதிகாரத்தை அதிகரித்து கொள்வதற்காக நாங்கள் 22 ஆம் திருத்தத்தை கொண்டு வர முயற்சிக்கவில்லை. நீதித்துறையை பலப்படுத்தவும், சேவைகளை வினைத்திறனாக்குவதற்காகவுமே உத்தேச 22 ஆம் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.இதன் பயன் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்குமே கிடைக்கும்.
நீதிமன்ற சட்டத்தை திருத்தம் செய்வதன் ஊடாக மக்களுக்கு நியாயம் வழங்கவே எதிர்பார்த்துள்ளோம்.இன்று எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் அன்று பதவியில் இருக்கும் போது நீதிபதிகளின் பதவி காலத்தை அதிகரிப்பதற்காக முன்வைத்த யோசனைகளை கருத்திற் கொண்டுள்ளோம்.எதிர்க்கட்சியின் உறுப்பினர் ரவூப் ஹக்கீம், மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினரும் நீதிபதிகளின் பதவி நீடிப்புக்கான யோசனைகளையே கடந்த காலங்களில் முன்வைத்தனர்.
சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளின் பதவிக் காலம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் மகாநாயக்கர்களுக்கு பொய்யுரைத்துள்ளார்கள். அவர்களையும் தவறாக வழிநடத்தியுள்ளார்கள். வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்துவதால் மக்கள் பாதிக்கப்பட போவதில்லை. ஊழல்வாதிகளே பாதிக்கப்படுவார்கள் என்றார்.