கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி, தொலைபேசி அழைப்புகள் மூலம் பணம் பறிக்கும் மோசடி கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ள பிரதி அமைச்சர்,

இவ்வாறான போலியான அழைப்புகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக, தனது பெயரைப் பயன்படுத்தி பணம் கோருபவர்களிடம் எவ்வித பணத்தையும் வழங்கவோ, அல்லது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் உத்தியோகபூர்வ ஆவணங்களைப் பகிர்ந்துகொள்ளவோ வேண்டாம் என அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இத்தகைய சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் கிடைத்தால், உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது உரிய அதிகாரிகளிடமோ முறைப்பாடு செய்யுமாறு கோரியுள்ள பிரதி அமைச்சர், இவ்வாறான திட்டமிட்ட மோசடிகளில் சிக்காமல் இருக்க மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.