பிரான்ஸ் முன்னாள் கலாச்சாரத்துறை அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்கு விசாரணை துவங்கியுள்ளது.பிரான்ஸ் முன்னாள் கலாச்சாரத்துறை அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளார். 2007ஆம் ஆண்டு, ரச்சிதா டதி (Rachida Dati, 60) என்னும் பெண் பிரான்சின் நீதித்துறை அமைச்சராக பதவியேற்றார். பிரான்ஸ் நாட்டில் ஒரு இஸ்லாமியப் பெண்ணொருவருக்கு அவ்வளவு பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டது அதுவே முதல்முறை.அப்போது பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்த நிக்கோலஸ் சார்க்கோஸி, பிரான்சிலுள்ள அனைத்துப் பிள்ளைகளுக்கும், கல்வியும் முயற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியமே என்னும் ஒரு செய்தியை தெரிவிப்பதற்காகவே ரச்சிதாவுக்கு நீதித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.ஆனால், ரச்சிதா ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, Renault-Nissan கார் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மேலும், சட்டத்தரணியாக செயல்பட்டதற்காக அந்நிறுவனக் கிளை ஒன்றிலிருந்து 900,000 யூரோக்கள் கட்டணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவர் அந்நிறுவனத்தில் எந்த பணியும் செய்யவில்லை.பின்னர் பிரான்ஸ் கலாச்சாரத்துறை அமைச்சராக ரச்சிதா பொறுப்பு வகித்தார். இந்நிலையில், Renault-Nissan நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டது தொடர்பில் ரச்சிதா மீது ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் முதலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.அந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று துவங்கியுள்ளது. வழக்கில் ரச்சிதா குற்றவாளி என நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர் 10 ஆண்டுகள் சிறை செல்லவேண்டிவரலாம்.மேலும், அவருக்கு 450,000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்பதுடன், ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது