இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் வியாழக்கிழமை (9) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இரண்டாவது சந்திப்பில் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டிய அடிப்படை அம்சங்கள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.
அதுமாத்திரமன்றி தமிழ் சட்டத்தரணிகள் பேரவையும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் இணைந்து புதிய அரசியலைப்பு வரைவைத் தயாரிக்கும்போது, அப்பணிகளில் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனக ஈஸ்வரன், பேராசிரியர் வி.ரி.தமிழ்மாறன் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.சொர்ணராஜா ஆகியோரும் உள்வாங்கப்படவேண்டும் என ஏற்கனவே முன்மொழியப்பட்டிருந்த நிலையில், அவர்களும் இன்றைய சந்திப்பில் நேரடியாகவோ அல்லது நிகழ்நிலை முறைமையிலோ பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நேர்ககில் இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாவது சந்திப்பு கடந்த மார்ச் 2 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.
அச்சந்திப்பில் சமஷ்டி முறைமையிலான அரசியலமைப்புக்கான சமூக ஒப்பந்தமொன்றை தமிழ், சிங்கள மக்களுக்கு இடையில் மேற்கொள்வதற்கான வரைவைத் தயாரித்தல், அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டிய சமஷ்டி அம்சங்களுடனான விரிவான அரசியலமைப்பு வரைவைத் தயாரித்தல், தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அரசியலமைப்பு உருவாக்கம் சார்ந்த முயற்சிகளைப் பொறுத்தமட்டில் தனித்தும், கட்சி அடிப்படையிலும் செயற்படுவதில்லை எனப் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 19 ஆம் திகதி நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டாவது சந்திப்பு எரிபொருள் நெருக்கடி காரணமாகப் பிற்போடப்பட்ட நிலையில், அச்சந்திப்பு வியாழக்கிழமை (9) கொழும்பில் நடைபெறவுள்ளது.
அதன்படி இச்சந்திப்பில் பங்கேற்குமாறு இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ்மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்மக்கள் தேசிய கூட்டணி என்பன தமது பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளன.
அதேவேளை தமிழ் சட்டத்தரணிகள் பேரவையானது இச்சந்திப்பில் பங்கேற்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்ட கட்சிகள் என்ற அடிப்படையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுக்கே அழைப்பு விடுத்திருந்த நிலையில், அண்மையகாலங்களில் பங்காளிக்கட்சிகளுடன் இணைந்து தமிழ்த்தேசியப் பேரவை என்ற பெயரில் இயங்கிவரும் கஜேந்திரகுமார் தரப்பு மத்தியில் இந்நடவடிக்கை கரிசனைகளைத் தோற்றுவித்திருந்தது. அதனையடுத்து இதனை சீர்செய்வதுடன், இன்றைய சந்திப்பில் கலந்துரையாடப்படவேண்டிய விடயங்கள் குறித்து ஆராயும் நோக்கிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் (8) தமிழ் சட்டத்தரணிகள் பேரவை உறுப்பினர்களுக்கு இடையில் நடைபெற்றதாக அறியமுடிகிறது.
இது இவ்வாறிருக்க புதிய அரசியலமைப்பு வரைவைத் தயாரிக்கும் பணிகளில் உள்வாங்கப்படவேண்டும் என முன்மொழியப்பட்டிருந்த சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனக ஈஸ்வரன், பேராசிரியர் வி.ரி.தமிழ்மாறன் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.சொர்ணராஜா ஆகியோரும் இன்றைய சந்திப்பில் நேரடியாகவோ அல்லது நிகழ்நிலை முறைமையிலோ பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.